Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
கட்டுரை
அடடே !!
சிறுகதை
கவிதை
சிறுகதை
கட்டுரை
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கோடிட்ட இடங்கள் - பாகம் : 20
- சித்ரன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

அம்மாவைப் பற்றி நான் எழுதின டைரி முழுவதையும் படித்து முடித்ததும் ரஞ்சனி கேட்டாள். இப்படியெல்லாம் வாழ சாத்தியமா கிருஷ்ணா என்றாள். இதிலென்ன மிகை? வானவில்லில் நமக்கு பிடித்த நிறத்தை தேடுவதும் - பட்டாம்பூச்சியை துரத்தி பிடித்து அதை மிக அருகில் ரசித்துவிட்டு பிறகு பறக்க விடுவதும் - முழு நிலாவை விட வானத்தில் தேடிப் பார்த்து பிறை நிலவை ரசிப்பதும் - பழைய ஊரையும் படித்த பள்ளியையும் மனசு மீண்டும் போய் பார்க்கத் துடிப்பதும் மனித இயல்பு தானே? தினமும் மிகச் சரியாக ஆ·பீஸ் வரும் இயல்பைக் கூட இங்கே நாம் வித்தியாச குணமாகத்தானே நினைக்கிறோம்! சாதாரண மனிதர்களிடமும் அசாதாரண விஷயங்கள் இருக்கின்றன. அது நாம் அவர்களைப் பார்க்கும் பார்வையில் இருக்கிறது என்பாள் அம்மா. அதை நான் அம்மாவிடமிருந்துதான் தேடத் தொடங்கினேன். அதன் தொகுப்புதான் இது என்றேன். அம்மா மாதிரியே அழகாய் வாழ்ந்து பார்க்கத் தோன்றுகிறது என்றாள் ரஞ்சனி. கேட்க எனக்கு சந்தோசமாய் இருந்தது. இதை ஒரு புத்தகமாய் தொகுத்தால் என் இதே உணர்வு படிக்கிற நிறையப் பெண்களுக்கும் தோன்றும் என்றாள். நல்ல யோசனையாய்ப் பட்டது. அம்மாவைப் பற்றிய என் டைரி குறிப்பை மொத்தமாய் ஒரு புத்தகமாய் யோசித்துப் பார்த்தேன். ஒருவேளை அது புத்தகமாய் வந்தால் அதன் இரண்டாம் பக்கத்தில் இப்படித்தான் எழுதுவேன். 'சமர்ப்பணம்! உலகில் உள்ள அத்தனை அம்மாக்களுக்கும்!'



அட்டகட்டி மின்சார வாரிய க்வார்டர்ஸ் மெயின் கேட்டைத் தாண்டி சரிவான சாலையில் ரொம்ப தூரம் நடந்து ஒரு ஹேர்பின் பெண்டில் இருந்த சிமெண்ட் திட்டில் உட்கார்ந்து கொண்டார்கள் கிருஷ்ணாவும், சத்யாவும். எப்போது இங்கே வந்தாலும் வழக்கமாய் உட்கார்ந்து பேசுகிற இடம். சரிந்து இறங்குகிற பச்சை மலைச்சரிவுகளில் பார்வையை ஓட்டியவாறு ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டான் கிருஷ்ணா. அவன் நீட்டிய 555 சிகரெட் டப்பாவிலிருந்து சத்யாவும் ஒன்றை எடுத்துக்கொண்டான். கிருஷ்ணா சிங்கப்பூரிலிருந்து ஐந்து நாட்களுக்குமுன் வந்தான். ஆனாலும் இன்றைக்குத்தான் அவன் பெரியப்பாவின் காரை எடுத்துக்கொண்டு சத்யாவின் வீட்டுக்கு வந்தான். "அட்டகட்டில சந்துரு அண்ணன் இல்ல. லீவுக்கு குடும்பத்தோட கிளம்பி மாமனார் வீட்டுக்குப் போயிருக்காரு. பக்கத்துவீட்ல சாவி குடுத்துட்டுப் போறேன்னிருக்கார்." என்றான். ரெண்டு நாள் வெளியூர் போகிறோம் என்றதும் 'என்ன திடீர்னு' என்று கேட்டு வழக்கம்போல் அம்மா கவவரமாய்ப் பார்த்தாள். பாத்துப் போயிட்டு வாங்க என்றாள்.

தேவிடம் இரண்டு நாள் லீவு சொல்லிவிட்டு மத்தியானம் இரண்டு மணி வாக்கில் இருவரும் காரில் கிளம்பி நேரே இங்கு வந்து சேர்ந்த கையோடு வெந்நீரில் ஒரு குளியல் போட்டுவிட்டு வழக்கமான ஹேர்பின் பெண்டுக்கு வந்துவிட்டார்கள். சத்யாவும் அவனும் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசின இடம் அது. கிருஷ்ணா ஆழமாய் புகையை இழுத்துவிட்டான். "இந்த க்ளைமேட்டுக்கு சிகரெட் பிடிக்கறது நல்லாருக்கு" என்றான். நிறைய பாக்கெட்டுகள் வைத்த பேண்ட் போட்டிருந்தான். வழக்கம்போல் வட்டக் கழுத்தோடு ஒரு பனியன். அவனுடன் கோயமுத்தூரிலிருந்து காரில் வரும்போது இருவரும் பொதுவான விஷயங்கள் தவிர வேறெதையும் பேசவில்லை. இப்போது அவனுடன் இந்த மலைப் பாதையில் உட்கார்ந்து கொண்டிருப்பதை யோசிக்கும்போது கிருஷ்ணாவை போன நிமிடம்தான் சந்தித்தமாதிரியும், அவனுடன் பேசுவதற்கான விஷயங்கள் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதுபோலவும் சத்யாவுக்குத் தோன்றியது. சந்துரு அண்ணன் இல்லாததும் கொஞ்சம் நல்லதாகப் போயிற்று. அவர் இருந்தால் ஆ·பிஸ¤க்கு லீவு போட்டுவிட்டு கூடவே சுற்றிக்கொண்டிருப்பார். இப்படியொரு தனிமை கிடைப்பது கஷ்டம்.

புளிமூட்டை மாதிரி மனிதர்களை அடைத்துக்கொண்டு ஒரு பஸ் உறுமிக் கொண்டு வளைவில் மேலேறிக் கடந்து போனது. கிருஷ்ணா சத்யாவின் பக்கம் திரும்பி அவனை ஒரு சில செகண்டுகள் பார்த்தான்.

"சொல்ரா"

சத்யா ஒரு மெல்லிய சிரிப்புடன் அவனைப் பார்த்தான். "என்ன சொல்லணும்?"

"உன்னோட காதல் அனுபவங்கள் பத்தி. இண்டரஸ்டிங்கா நிறைய நடந்தது போல!!"

சத்யா அவனை முறைத்தான். "டேய்.. போதும் வெறுப்பேத்தாத."

கிருஷ்ணா சத்தமாக மலையில் எதிரொலிக்கிற மாதிரி சிரித்தான். "ரொம்ப பாதிப்போ?!!.." என்றான். பிறகு கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தான். தீர்ந்து போன சிகரெட்டை வீசிவிட்டு இன்னொன்றைக் கையில் எடுத்துக்கொண்டான். "நான் எல்லாமே சொல்றேன்... அதுக்கு முன்னாடி... இந்தா இதை நீ படிக்கணும்னு கொண்டு வந்தேன். கொஞ்சம் டைம் எடுக்கும். பரவால்ல.. படிச்சு முடி." அத்தனை நேரம் சிமெண்ட் திட்டில் தன் அருகிலேயே வைத்திருந்த டைரியை சத்யாவின் பக்கம் தள்ளினான். சத்யா கிருஷ்ணாவைப் புதிராய்ப் பார்த்துக்கொண்டு அந்த டைரியை தயக்கத்துடன் எடுத்து மெதுவாய் புரட்டினான்.

அதன் முதல் பக்கத்தில் "சமர்ப்பணம்! உலகில் உள்ள அத்தனை அம்மாக்களுக்கும்!" என்று எழுதியிருந்தது. சத்யா தொடர்ந்து டைரியைப் புரட்டினான். படிக்கப் படிக்க அவனுள்ளே ஓடுகிற கேள்விகளின் விளைவாய் அவன் புருவங்கள் உயர்ந்தன.

 .... என் அம்மாவே மொத்தமாய் ஒரு கவிதைத் தொகுப்புதான்....

 .... அநாவசிய கோபமோ அர்த்தமுள்ள கோபமோ எதுவானாலும் அதை ஆக்கபூர்வமாக மாற்றும் குணத்தை நான் அம்மாவிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்.....

 .... நான் நினைத்துக் கொள்வேன். அம்மாவின் ராஜ்ஜியத்தில் வாழப் பிறந்த அத்தனை உயிர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவைதான்!....

 .... நான் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். அம்மாவிடம் எழுதாமல் நிறைய கவிதைகள் இருக்கிறது!....

 .... அம்மாவின் மனசை ஓரளவு புரிந்து கொள்ளலாம். அம்மாவின் மனசின் மனசை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.....

 .... குழந்தைத்தனமாய் இருப்பது வேறு. குழந்தையாய் இருப்பது வேறு. இதில் அம்மா இரண்டாவது ரகம்! ....

 .... யாரும் கவனிப்பதற்காக அம்மா எதையும் செய்வதில்லை. அம்மா எதை செய்தாலும் கவனிக்கப்படுகிறது அவ்வளவுதான்!....

 .... நான் முதல் முதலில் அம்மாவிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன் அனுபவம் என்றால் என்னவென்று புரிந்து கொண்ட அனுபவத்தை!....

விரல்களும் கண்களும் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டிருந்தன. இடையிடையே ஆச்சரியமாய் நிறைந்த விழிகளோடு கிருஷ்ணாவை அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் சத்யா. கிருஷ்ணா அமைதியாய் நாலாவது சிகரெட்டைப் புகைத்துக்கொண்டிருந்தான். டைரி முழுக்கப் படித்து முடிக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆயிருக்கும். முடித்துவிட்டு டைரியை நம்பாமல் பார்த்துக்கொண்டு மறுபடி மறுபடி புரட்டிக்கொண்டிருந்தான் சத்யா.

"கிருஷ்ணா!! இதில வர்ர அம்மா...." மனது நெகிழ்ந்திருந்ததில் சத்யாவுக்கு வார்த்தை தொண்டைக்கு வரவில்லை.

கிருஷ்ணா மெதுவாய் தலையை மேலும் கீழும் ஆட்டினான். "உன் அம்மாதான்டா"

"ரியலி சர்ப்ரைஸிங்டா!"

"சத்யா.. இது ஏதோ நான் கற்பனையா எழுதி வெச்சிருக்கேன்னு நீ நினைச்சுக்காத! முழுக்க முழுக்க நிஜம். இதெல்லாம் உனக்கு எப்படிரா தெரியும்?. உனக்குத்தான் உங்கம்மாகூட பத்து நிமிஷம் பேசக்கூட நேரம் கிடையாதே. அவங்களுக்கு உடம்பு சரியில்லேன்னாக்கூட ரஞ்சனி வந்துதானே மருந்து வாங்கித் தரவேண்டியிருக்கு!"

சத்யா லேசாய் அடிபட்டவன் மாதிரி உணர்ந்தான். ஆச்சரியத்தின் விளிம்பில் கூடவே கொஞ்சம் குழப்பமும் சேர்ந்துகொண்டது. அவன் மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

"யோசிச்சுப் பாருடா! நீ எப்படியெல்லாம் உன் அம்மாகிட்ட மோசமா நடந்துக்கறேன்னு. ஒரே வீட்டுக்குள்ள இருந்துட்டு ரெண்டு பேருக்கும் சம்பந்தமில்லாதமாதிரி நடந்துக்கற! அடிக்கடி சண்டை போடற! எரிச்சலா பேசற! ஏன் அந்த மாதிரி அம்மாகிட்ட நடந்துக்கறேன்னு நான் கேட்டிருந்தா அதை அட்வைஸ¥ன்னு நினைச்சிட்டு நீ அப்பவே மறந்திருப்பே. உன் அம்மா உம்மேல எவ்வளவு பாசமா இருக்காங்கறதை உங்கிட்ட சொல்ல நினைச்சேன். சொல்லியிருந்தாலும் அது உனக்கு சாதாரண விஷயமாத்தான் இருந்திருக்கும். என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அன்னைக்கு ரயில்வே ஸ்டேஷன்ல உன்னை ஒரு பொண்ணு லவ் பண்றான்னு சும்மா பொதுவா சொல்லிட்டுப்போனேன். பொண்ணுன்னு சொன்னதும் நீ யாரைத் தேடுவேன்னு எனக்கு நல்லாத் தெரியும். நான் எதிர்பார்த்தபடியே எல்லாமே நடந்துச்சு. ஒருத்தரால நேசிக்கப்படறோம்கிற விஷயம் உனக்குள்ள ஆழமாப் பதியணும். அப்றம் அது கிடைக்காமப் போறப்ப ஏற்படற துயரம்தான், அன்புன்னா என்ன நேசிப்புன்னா என்னன்னு உனக்கு என்னைவிட அழகா கத்துத் தரும். ஏன்னா இப்ப நீ இருக்கிற உன்னோட இதே நிலைமைலதான் உங்கம்மா இருக்காங்க. அவங்களுக்கு உன்னைவிட்டா வேற யாரு இருக்காங்க சொல்லு! அவங்க உன் மேல வெச்சிருக்கிற அன்புக்கு முன்னாடி உன்னோட இந்தக் காதல், கத்தரிக்காய் இதெலெல்லாம் ரொம்ப சாதாரணம்டா. சொல்றது புரியுதா?

சத்யாவிடமிருந்து ஒரு தலையசைப்பு ஆமோதிப்பாய் வந்தது. கிருஷ்ணா தொடர்ந்தான்.

"அவங்க அறிவுக்கும், அனுபவத்திற்கும் வாழ்க்கையை அவங்க பார்க்கிற பார்வைக்கும் முன்னாடி இந்தப் பிரச்சினையொண்ணும் பெரிய விஷயம் கிடையாது. உங்க அம்மா ஒவ்வொரு விஷயத்தையும் என்கிட்ட பகிர்ந்துக்கிறபோதும் அவங்ககிட்ட எப்பவும் தென்படற வருத்தம் என்ன தெரியுமா? நீ அவங்க கிட்ட அன்பா நெருங்கிப் பேசறதில்லை. பழகறதில்லைங்கறதுதான். உங்கப்பா மாதிரியே நீயும் அவங்களைப் புரிஞ்சுக்காமயே போயிடுவியோன்னு நினைக்கிறாங்க. நீ உன் அம்மாவைக் கவனிச்சதைக் காட்டிலும் ரஞ்சனி கவனிச்சுக்கிட்டதுதான் அதிகம். அது உனக்குத் தெரியுமா? நான் எங்கம்மாவைவிட உங்கம்மாகிட்டதான்டா அதிகம் பழகியிருக்கேன், பேசியிருக்கேன். அவ்வளவு ஒட்டுதல். அவங்க கேரக்டர் - ஜஸ்ட் ·பில்டு வித் ஒன்டர்ஸ். தெரியுமா உனக்கு? அற்புதமான, ஆச்சரியமான, அதிசயங்கள் நிறைஞ்ச கேரக்டர்டா!. இந்த டைரில எழுதினது கொஞ்சம்தான். உங்கம்மாவைக் கவனிக்க கவனிக்க இன்னும் எனக்கு விஷயங்கள் கிடைச்சுட்டுத்தான் இருக்கு. எல்லாத்தையும் எழுத ஆரம்பிச்சா ஒரு டைரியெல்லாம் பத்தாதுன்னு தோணுது. நான் நினைச்சுக்குவேன். உங்க அம்மா வருத்தப்படறதில எந்த நியாயமும் இல்ல. இவ்வளவு அற்புதமான மனுஷி உனக்கு அம்மாவா கிடைச்சும் அதை புரிஞ்சுக்காம நீ எப்பவும் பட்டும் படாம விலகியிருக்கிறதுக்கு நீதான்டா வருத்தப்படணும். ரொம்பப் பக்கத்திலயே இருந்தாலோ, சுலபமா கிடைச்சாலோ எந்தப் பொருளுக்கும் மதிப்பு இருக்காதுன்னு சொல்வாங்க. குற்றாலத்தில இருக்கிறவன் டெய்லி அருவில குளிப்பானான்னு தெரியாது. ஆக்ரால இருக்கிறவன் நம்மளவுக்கு தாஜ்மஹாலை ரசிக்கமாட்டான். அது உண்மைதான் போலிருக்கு. கரெக்டா இல்லையா?"

"ம்" என்றான் சத்யா இறுக்கமான முகத்துடன். தலைமுடிக்குள் இரு கைவிரல்களையும் செலுத்தி அளைந்து கொண்டு வானத்தைப் பார்த்தான்.

"சரி! போகற வரைக்கும் போகட்டும்னு இருந்தேன்! அப்றமென்ன? மலர், மதுளான்னு நீயா கற்பனை பண்ணிக்கிட்டு அலைஞ்சே! அதெல்லாம் ஒரு அனுபவம்தான். இல்லைன்னு சொல்லலை! அதிலெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு ஒரு நாள் திரும்பி வருவேன்னு எனக்குத் தெரியும். வந்துட்ட! இப்ப சொல்றேன். முதல்ல நீ உன் பக்கத்துல இருக்கறவங்களை நேசிடா. உன் மேல நிஜமா அக்கறைப்படறவங்க மேல முதல்ல அக்கறைப்படு. எங்கயோ இருக்கிற உன் லவ்வர் பொண்ணுங்களை விடு. உன்மேல நட்பு வெச்சிருக்கிற என்னை விடு. உங்கப்பா சின்ன வயசில உன்னை விட்டுப்போன அந்தக் குறை தெரியாம வளர்த்த உங்கம்மா உனக்கு முக்கியமில்லையா? அவங்ககிட்ட முதல்ல அன்பா பேசு! பாசமா நடந்துக்க. அவங்க மேல எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறதை நிறுத்து! சண்டை போடறதை நிறுத்து! அவங்களப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. என்ன நான் சொல்றது? இதுக்கு மேலயும் இதுதான் என் கேரக்டர்னு உனக்குப் புடிச்ச வழியில போயிட்டிருந்தீன்னா அப்படியே போ! எனக்கொன்னும் இல்ல. உனக்கு இதைப் புரிய வைக்கிறதுக்காக நான் பண்ணின யுத்தி உன்னை வேதனைப் படுத்தியிருந்தா.. மன்னிச்சுக்கடா!"

அவ்வளவுதான் என்பது மாதிரி கிருஷ்ணா பேச்சை நிறுத்திவிட்டு கைவிரல்களை நெட்டி முறித்து டப்பாவில் சிகரெட் தேடினான். தீர்ந்து போயிருந்தது. காலி பாக்கெட்டை சரிவில் வீசியெறிந்தான். சத்யா ஒன்றும் பேசாமல் இன்னும் யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். காற்றில் உடம்பை உறுத்தாத குளிர் இருந்தது. சத்யா அந்த டைரியை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருந்தான். அவன் நெகிழ்வை வெளிக்காட்டிக்கொள்ளமலிருக்க ரொம்ப பிரயத்தனப்படுவது தெரிந்தது. இருக்கட்டும் என்று கிருஷ்ணாவும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. யோசனைகளுக்காக விடப்படும் இடைவெளிகள் சில புரிதல்களைத் தரும். தெளிவுகளைத் தரும். மெளனம் நல்லது.

அன்றைக்கு ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பித்து இன்று இங்கே வந்ததுவரை நடந்தவையெல்லாம் கோர்வையற்று நிழல்படம்போல் ஓடிக்கொண்டிருந்தது சத்யாவின் மனத்தில். குளிர் காற்று நிரம்பியிருந்த இடத்தில் இருளும் நிரம்ப ஆரம்பித்தது. அடுத்த ஹேர்பின் பெண்டில் வளைந்து திரும்பும் பஸ்ஸின் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது. க்வார்டர்ஸ¤க்குத் திரும்பிப் போகலாமென்ற எண்ணத்தில் கிருஷ்ணா திட்டிலிருந்து இறங்கி ஸ்லிப்பர்களை அணிந்து கொண்டான். சத்யாவும் எழுந்து கொண்டு அவனுடன் அமைதியாகவே நடந்து வந்தான். க்வார்டர்ஸ் கேட்டின் அருகில் வந்தபோது கிருஷ்ணா மெளனத்தை உடைத்தான். சத்யாவின் தோளில் கைபோட்டுக்கொண்டு மெதுவாய்க் கேட்டான். "என்னடா ஒரே யோசனை? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா.. சரி அதையே யோசிச்சிட்டிருக்காத. நாளைக்கு வால்பாறை எங்கயாவது போலாமா? சொல்லு!"

சத்யா இல்லை என்பதுபோல் மெல்லத் தலையாட்டினான். பிறகு மெல்லிய குரலில் சொன்னான். "இல்லடா! ஊருக்குப் போலாம். எனக்கு உடனே எங்கம்மாவைப் பாக்கணும்போல இருக்கு!"

(முற்றும்)


என் குறிப்பு

வணக்கம்! கோடிட்ட இடங்கள் தொடர் இத்துடன் நிறைவு பெற்றுவிட்டது. உங்களிடமிருந்து விடைபெறுமுன் ஒரு விஷயம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தத் தொடரின் பிரதான ஜீவ நாடியாய் ஒவ்வொரு அத்தியாயத் துவக்கத்திலும் வந்துகொண்டிருந்த "கிருஷ்ணாவின் டைரிக் குறிப்பிலிருந்து" பகுதியை முழுக்க முழுக்க எழுதினது என் நண்பர் சரசுராம். இத்தொடருக்குத் தேவைப்படுகிறது என்று நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒவ்வொரு டைரிக் குறிப்பையும் மிக அருமையாகயும் மிகுந்த ரசனை வெளிப்பாட்டுடனும் எழுதி கொடுத்தார். அவைகள் உங்களுக்குப் பிடித்திருந்தன என்பதும் எனக்கு மகிழ்வைத் தருகிறது. சரசுராமுக்கு என் நன்றிகள் உரித்தாகுகின்றன. சரசுராம் ஒரு நல்ல சிறுகதையாளர். அழகான மன உணர்வுகளுடன், நெகிழ்வுகளுடன், ரசனைகளுடனும் சிறுகதைகள் படைப்பதில் தேர்ந்தவர். இப்போது இணை இயக்குநராக சினிமாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இத் தொடரை நிச்சயம் விரும்பிப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இத்தொடர் எழுதும் வாய்ப்பைத் தந்த தமிழோவியம்.காம் மின் இதழுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் பிறிதொரு நாள் சந்திப்போம்.

அன்புடன்
சித்ரன்

 
உங்கள் கருத்து  
Elanthiraiyan
10/15/2004 , 1:59:42 AM

அன்பின் சித்ரன், அருமையான தொடர், அற்புதமான முடிவு. கிருஷ்ணாவின் டைரிக் குறிப்புகள் ஒவ்வொன்றும் மிக அழகாக இருந்தன!!
-இளந்திரையன்,பெங்களூர்
   
Ramnath
10/15/2004 , 10:07:54 AM

மிக அருமையான தொடர்.ஓரு நல்ல கவிதை தொகுப்பை படித்த திருப்தி கிடைத்தது.
ராம்னாத்
   
Mohan.S
10/15/2004 , 2:46:28 PM

சித்ரன்.. மிக்க மகிழ்ச்சி.மிகவும் இனிமையான கதை.அருமையான நடைபதிவு.உள்ளத்தின் உணர்வுகள் உயிரோட்டத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுவும் இந்த அத்தியாயத்தில் முக்கிய குறிப்புகளை 'கோடிட்ட இடங்கள்' ஆக நிரப்பி இருப்பது உங்கள் திறமைக்கு மைல்கல்.
மிக விரைவில் அடுத்த படைப்பை எதிர்பார்க்கிறேன்.
சரசுராம் - அருமையான குறிப்புகள்.கலக்கிட்டீங்க போங்க...
என்றும் அன்புடன்
மோகன்.சா.
Dallas.
   
Karvendhan
10/15/2004 , 8:55:05 PM

அருமை
   
Chithran
10/16/2004 , 6:23:47 AM

நன்றி இளந்திரையன், ராம்நாத், மோகன், கார்வேந்தன்.
   
Ramachandranusha
10/25/2004 , 11:38:20 AM

சித்திரன் சூப்பர்! உங்க ஈ.மெயில் ஐடி கொடுங்க, கதையைப் பற்றி
சில கேள்விகள் கேட்கணும்
   
Nat Kumaresan
11/17/2004 , 9:36:22 PM

அருமையான கதை. நன்றிகள் பல.-ந.குமரேசன்
   
natarajan
11/22/2004 , 10:59:45 AM

மிக அருமையான கதை. வாழ்வின் முக்கியமான அன்பை அழகாக கூறி உள்ளிர்கள்.
   
muthukumar.k
11/30/2004 , 1:20:32 AM

சுபெர கதச கதை அதிலும் அம்மா பத்தி நிரயா விஷயங்கல் அருமயன முடிவு நிரய எதிர்பார்புகலுடன் சுபெர் மமு சுபெர் வர்தைகல் கிடைகல புகல்வதர்கு...

   
Murali
2/25/2005 , 2:35:04 AM

ஒரு நல்ல கதை இல்லை ஒரு நல்ல கவிதை போல் சொல்லி இருந்தீர்கள். வாழ்த்துகள்
   
N.B. Sundararajan
3/22/2005 , 9:14:54 AM

இந்த கதையை நான் இரண்டு பாகங்களாக படித்தேன். மிக அருமையாக எழுதியிருந்தீர்க்ள். ஒரு அழகான உரை நடை கவிதையை வாசித்த திருப்தி ஏற்பட்டது. அதிக வர்ணனைகள் இல்லாமல் கோயம்புத்தூரை கண்முன் கொண்டு நிறுத்தியது ஒரு புதிய முயற்சி. வாழ்த்துக்கள்.
சுந்தர்
   
N.B. Sundararajan
3/23/2005 , 8:56:28 AM

சரசுராமிற்கு ஒரு பிரத்தியேகமான நன்றி. ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் அருமை.
   
rajkumar
4/27/2005 , 9:08:10 AM

ஏமாற்றமாக இருந்தது ஆனால் நிறைவாக
   
Sankar Kumar. S
5/12/2005 , 2:54:58 AM

சரசுரமின் அம்மாவை பட்ரிய முன்னுரை நன்ரு. பாராட்டுகல். சன்கர்குமார்
   
Sankar Kumar. S.
5/12/2005 , 3:02:19 AM

சரசுராமின் அம்மாவை பற்றிய குறிப்புகள் அருமை. பாராட்டுகள். - சங்கர்குமார், சென்னை - 33.
   
Tamizhini
5/13/2005 , 8:46:12 AM

தாய்மையின் அருமை தெரியாதவர்களுக்கு, காதல் கிடைப்பது கடினம்தான். நல்ல கருத்து, தேர்ந்த நடை. இரட்டை அர்த்த சினிமா வசனங்களிலும், நாலாந்தர விமர்சனங்களிலும் ஊறிப்போயிருக்கும் சாதாரண தமிழனுக்கு அம்மாவை பற்றிய முன்னுரை அருமையான வழிகாட்டி. நன்றி.
   
uma krishna
9/19/2005 , 10:09:35 AM

மிக்க அருமையான தொடர். ரொம்பத் தரமாக இரு ந்தது. அம்மாவைப் பற்றி யார் எப்படி எழுதினாலும் நன்றாகத் தான் உள்ளது. சரசுராம் அவர்களுக்கு நன்றி. முதல் முறையாக தமிழோவியம் படிக்கிறேன், மிகவும் த்ருப்தியாக் உணர்கிறேன்.
   
balaji
10/13/2005 , 11:12:20 PM

It is a really good novel. Its beautifully taken through to the end. Wish chitran comes up with really good stories like this. Also wish to congratulate sarasuram for his excellent quoations.

regards
balaji
UK
   
R.UMA
10/19/2005 , 2:24:14 PM

IT IS REALLY AWODERFUL STORY
   
kesavan
12/2/2005 , 5:23:21 AM

மிகவும் அருமை. 2 மனி நெரம் பொனதெ தெரியல.
   
kalpa
1/19/2006 , 6:26:30 AM

கதையின் 3-வது அத்தியாயதில் க்ரிஷ்னா சொன்னது சத்யாவின் அம்மவைத்தான் என்பது ஊகிக்க முடிந்தாலும், கதையை எடுது சென்ட்ர விதம் அருமை. அவரவர் அம்மாக்கலை கூர்ந்து கவனிக்க செய்திருக்கும். பாராட்டுக்கல்.
   
giritharan
9/16/2006 , 7:43:08 AM

உங்களுடய கற்பனை வளம் மட்றும் கதை வளம் மிகவும் அருமை.உங்கள் தாய் மிகவும் பக்யஷாலி.
   
murali
12/20/2006 , 5:41:15 PM

கதை மிக அருமையாக இருந்தது. க்ருஷ்ணாவின் டைரிக்குறிப்புகள் அற்புதம். ஏதோ வாழ்க்கையில் ஒட்டியும் ஒட்டாதது போல் இருந்து, தாமரை இலைத்தண்ணீர் போல் வாழும் ஒரு உன்னத ஆத்மாவைப் பார்ப்பது போல் உணர்ந்தேன்.
   
veeramani
9/21/2007 , 12:53:16 AM

எழிய நடையில் உனர்ச்ச்யுடன் பொங்குகிரது
   
Hayah Roohi
10/16/2007 , 10:10:59 AM

அருமையான நாவல்!
விழிகளில் ஈரம்...
நெஞ்சில் ஏக்கம்....
அம்மாவைப் பற்றிய நாட்குறிப்புகளில் பலவும் என் உம்மாவுக்கும் கச்சிதமாய்ப் பொருந்துகின்றன!
அம்மா என்ற கவிதை தந்த இருவருக்கும் என் இனிய நன்றிகள்!!!
   
UDHAYA JOTHI
5/21/2009 , 3:04:57 AM


Really Super & Awonderful Story.

Amma Enra Oru Varthaiku Pasam, Parivu, Unmai, Enru Pala Aarthangal

Erukunu Entha storyla Theringiketten.



   
kannan
3/8/2010 , 2:34:50 PM

நானும் அப்படி என்னதான் எழுதி இருக்கீங்கன்னு படிக்க ஆரம்பிச்சு, கடைசில அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்காம போன தலை வெடிச்சுடும் போல ஒரு நிலை வந்து, வேறு வழியில்லாமல் ஒன்னுக்கு அடக்கி கொண்டே படித்து முடித்தேன். ஒரு வார்த்தைல சொல்லனும்னா, சீட் நுனில உக்காத்தி வைச்சு புட்டீங்க.
   
சித்ரன்
3/11/2010 , 8:10:09 AM

நண்பர்களின் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிகள்
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |