|
சீதை இராமனைபோல் அமைதியான பெண்ணல்ல.நினைத்ததைப் பேசிவிடுவாள்.இராமன் காட்டிற்குப்புறப்படும் தருணத்தில் தானும் உடன் வருவதாகப் பிடிவாதம் பிடிக்கின்றாள். இராமன் தயங்கிய பொழுது "நீங்கள் ஆண்வேடம் தரித்த பெண்ணென்று அறியாமல் என் தந்தை உங்களுக்கு என்னை மணமுடித்து வைத்துவிட்டார் " என்று கூறுகின்றாள். இலக்குமனிடம் வரம்பு மீறிக் கடுமையாகப் பேசுகின்றாள். அக்கினி பிரவேசக் காட்சியில் இராமனுக்கு விடைகள் அளித்தபின் முடிவில் "பெண் மனத்தை இவ்வுலகில் எந்த ஆண்மகனுக்கும் புரிந்து கொள்ளத் தெரியாது" என்று பலருக்கு முன்னிலையில் தன் அபிப்பிராயத்தைச் சொல்லுகின்றாள். பெண்ணுக்குப் பேச்சு சுதந்திரம் இல்லாக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் இத்தகைய உரையாடல்கள் இருந்திருக்க முடியாது.
வானத்திலிருந்து மழைத்துளிகள் மண்ணை நோக்கி வரும்பொழுதே காற்றில் உள்ள தூசுகளுடன் கலந்து, மண்ணிலே ஆறாய் ஓடும்பொழுது பாதையில் இருப்பவைகளையும் அள்ளி அணைத்துக் கொண்டு ஓடுகின்றது.கதை நிகழ்ந்த காலத்திலிருந்து செவிவழிப் பயணமாகப் புறப்பட்டு கவிஞனிடம் வந்து சேரவும், கதையில் மனம் பறிகொடுத்தவன்,அதனை அலங்கரித்துக் காவியமாக உருவாக்கிவிடுகின்றான். கதை என்றால் உச்சக் கட்டம் வேண்டாமா?அக்கினிபிரவேசம் மேடை நாடகமாக பரபரப்புடன் உருவாக்கப் பட்டிருக்கலாம். சீதாயணம் என்ற பெயர் வைக்க வால்மீகி விரும்பியதாக ஒரு செவிவழிச்செய்தி உண்டு. சீதையின் மேல் உள்ள பரிவிலே காட்சியை மிகைப் படுத்தியிருக்கலாம்.எழுத்தாளன் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது முற்றிலும் தன்னை அவன் இழந்து விடக்கூடாது.இராமனனின் பாத்திரத்தன்மையை மறக்கும் அளவு அவர் போயிருப்பாரா? எனவே பல இடங்கள் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி. வால்மீகி தன் காலச் சூழலுக்குள் பழங்காலக்கதையை அமைத்துவிட்டாரா?தன்னையும் ஒரு பாத்திரமாகக் கதையில் அமைத்துக் கொள்வது படைப்பாளிக்குள்ள சலுகை.உத்திரகாண்டங்கூட ஒட்டப்பட்ட பகுதியாக இருக்கலாம்.
தந்தை-பிள்ளை உறவிற்கு இராமாயணம் என்றாலும், இல்வாழ்க்கையில் ஏகபத்தினிவிரதன் என்பதற்கு இராமன் ஒருவன் தான் இன்றும் எடுத்துக்காட்டாகப் பேசப்பட்டுவருகின்றது. அன்றும் இன்றும் ஆணாதிக்க உலகில் அவர்களுக்கு நிறைய சலுகைகள் வைத்துக் கொண்டு உலா வரும்பொழுது, எடுத்துக்காட்டாய் விளங்கும் இராமனை இந்த அக்கினிப் பிரவேசக் காட்சியில் அமிழ்த்திவிடக்கூடாது.ஆழ்ந்து சிந்திக்கும் தலைமுறை உருவாகிவிட்டது.இதுபோன்ற இதிகாசத்தில் கேள்விக்குரிய காட்சி¢களுக்குச் சரியான விளக்கங்களை ஆராய்ந்து தரவேண்டியது சான்றோர்களின் கடமையாகும். இன்றும் நம்மிடையே சிறந்த ஆராச்சியாளர்கள் இருக்கின்றனர். இதிகாச இராமன் தன் மனைவியை இப்படி பொது இடத்தில் கேவலப்படுத்தியிருக்க மாட்டான். இது என் உணர்வு சொல்லுகின்றது. உண்மையை உணர்த்த சான்றுகள் வேண்டும். கண்ணில் துரும்பு இருந்தால் உறுத்திக் கொண்டிருக்கும். கண்ணில் துரும்புடன் இருப்பது பொறுக்க முடியவில்லை. அறிஞர்கள் முயன்றால் துரும்பை எடுத்துவிட முடியும். என் பணிவான வேண்டுகோளைக் சான்றோர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
(முற்றும்)
|