|
சுடுநீர் ஊற்றையும் அதை சுற்றியுள்ள இடங்களையும் பொறுமையாக பார்த்து முடித்தோம். ராஜா ராணி நீச்சல்குளங்கள் என்று பாழடைந்த இடங்களை காட்டினார்கள். ஒரு பிரமிப்பும் தோன்றவில்லை. ஒரு மனிதன் படுத்துக் கொள்ளும் அளவில் ஒரு கல்தொட்டியை காட்டி இதுதான் ராஜவம்சத்தின் குளியல் தொட்டி என்றார்கள். என் நண்பன் என்னை கொலை வெறியோடு பார்த்தான். ரகசியமாய் என் காதருகே வந்து, "எங்க ஊர்ல மாடு குடிக்கிற கழனிதொட்டி கூட இதை விட பெருசா இருக்கும்" என்றான். நான் தலையாட்டிக்கொண்டே மையமாய் புன்னகைத்து வைத்தேன். இது முடிந்ததும் களிமண் (டெரக்கோட்டா) வீரர்களை பார்ப்பதாக திட்டம், "அங்கனயும் எதுனா கிளியாஞ்சிட்டி பொம்மைங்கள வச்சு ஏமாத்தப் போறானுங்க... நான் உன்ன கொல்லப்போறேன்"னு என் நண்பன் வேறு மிரட்டிக் கொண்டே வந்தான்.
உண்மையில், 18 மணி நேர பிரயாணத்தையும் பொறுத்து, ஆயிரக்கணக்கில் காசையும் செலவழித்து, என் நண்பர்கள் யாரும் கூட சென்றிராத இடத்திற்கு எதற்காக செல்ல வேண்டும்.
* யின் வம்சத்தை நிறுவி சீனா என்ற பேரரசு உருவாக காரணமாயிருந்த மன்னனின் தலைநகரை நேரில் பார்ப்பதற்காகவா?
* 13 அதிமுக்கிய சீன வம்சங்களின் ஆட்சியின் போது ஷியான் நகரம்தான் தலைநகராக இருந்திருக்கிறது எனவே ஷியானைப் பார்த்தால் சீன வரலாற்றில் வெகுதூரம் பயணித்த திருப்தி கிடைக்குமே அதற்காகவா?
* யுவான் சுவாங் என்ற புத்த துறவி இந்தியா சென்றுவந்து நிறுவிய 'பகோடா'க்கள் எனப்படும் புத்த தளங்களை பார்வையிடவா. (இங்குதான் அவருடைய எழுத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப் படுகின்றன)
* இல்லை இவையனைத்தையும் விட, உண்மைதான் என்று உறுதி செய்யப் படாத ஒரு நாடோடிக் கதைக்காக! ஆம் கதைகள்தான் பல சமயங்களில் என் பாதையை நிர்ணயிக்கிறது. எனக்கு தேவதைக்கதைகளில் இன்றளவும் நம்பிக்கை உண்டு... ஓ விலகிச் செல்கிறேனோ சரி டெரக்கோட்டா வீரர்களை பார்த்துவிடுவோம் இன்னும் ஓரிரு நொடிகளில். 1974-ம் வருடம் ஒரு வயலில் கிணறு தோண்டும்போது தற்செயலாக வெளிப்பட்டிருக்கின்றனர் டெரக்கோட்டா வீரர்கள். அவர்களுடன் சேர்ந்து சீன வரலாற்றைப் பற்றிய பல அறிய தகவல்களும் வெளிவந்திருக்கின்றன. ஷியானை சுற்றி மட்டுமே பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. மேலும் பல இடங்களிலும் தற்போது ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன அவை இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படவில்லை. இதுவரை கண்டுபிடித்தவையெல்லாவற்றையும் ஒரு மிகப் பெரிய மண்டபம் போல் அமைத்து மூன்று குழிகளில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் இருக்கும் இக்களிமண் பொம்மைகளின் வயது ஏறக்குறைய 2500. எல்லாமே ஆளுயர பொம்மைகள் அதுவும் அன்றைய கால கட்டத்தில் எந்த வகையான வீரர்கள் இருந்தார்களோ அவர்களை, தோற்றம், உடை, ஆயுதம் முதற்கொண்டு முகங்களில் பிரத்யேகமான உணர்ச்சிகள் வரை தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. நின்ற நிலைகளில், அமர்ந்த நிலைகளில், ஆயுதமேந்தி, கைகளை கட்டி என அனைத்தும் அசத்தல். சரி குழிவாரியாக பார்த்துவிடுவோமா?
குழி 1
14000 சதுர அடிக்கும் அதிகமான இதுதான் ஆகப்பெரிய குழி. போர்ப்படை போலவே சுமார் 6000 களிமண் வீரர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்கள் கையில் உண்மையான ஆயுதங்களோடு காட்சியளிக்கின்றனர். முன்வரிசையில் வில்லாளிகளும் பின்வரிசைகளில் நீண்ட ஈட்டி தரித்த வீரர்களுமாய் (கிளேடியேட்டர், அலெக்ஸாண்டர் போன்ற படங்களில் வரும் போர்க்காட்சிகளை நினைவுபடுத்தின) உண்மையிலேயே மிகப்பெரிய படை ஒன்று நம் ஆணைக்கு காத்திருப்பது போல் இருக்கும். 50க்கும் மேற்பட்ட ரதங்களும் உண்டு அந்த வரிசையில்.
குழி 2
ஏறக்குறைய 12000 சதுர அடியில் அமைந்துள்ள இந்தக் குழியில், 300க்கும் மேற்பட்ட வில்வீரர்கள் (cross bow archers) நின்று கொண்டும், முழங்காலிட்டு அமர்ந்துகொண்டும் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்கிறார்கள். நான்கு நான்கு குதிரைகளாய் இழுக்கும் சுமார் 60 ரதங்களும் உண்டு. மேலும் பல்வேறு ஆய்தமேந்திய காலாட்படையும் பல்வேறு குழுக்களாய் ரதங்களோடு நிறுத்திவைக்கப் பட்டுள்ளன.
குழி 3
500 சதுர அடியில் அமைந்துள்ள மிகச்சிறிய இடம் இது. சுமார் 60 காலாட்படை வீரர்கள், ஒரே ஒரு ரதம் நான்கு குதிரைகளோடு இருக்கும் இந்த இடத்தை போர் நடக்கும் இடங்களில் இருக்கும் தளபதிகளின் ஆலோசனை மையமாக பார்க்கிறார்கள்.
நான் கேள்விப் பட்ட கதை மட்டும் உண்மையாக இருந்து அமைச்சன் மகளின் திட்டம் மட்டும் தவிடுபொடியாயிருப்பின் எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளையல்லவா இப்படி கண்டெடுத்திருப்போம் என்று நினைக்கையில் என் முதுகுத் தண்டு ஜில்லிட்டுத்தான் போனது ஒரு நொடி ஒரே ஒரு நொடி.
தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் பாதரசத்தை கலந்து துருப் பிடிக்காத உலோகத்தில் ஆயுதங்கள், ரதங்கள் எல்லாம் கண்டுபிடிப்புகள் வரிசையில் இருக்கின்றன. 2500 வருடங்கள் கழித்தும் களிமண் பொம்மைகள் கூட இன்றளவும் உறுதியாக இருக்கின்றன. இந்த களிமண் பொம்மைகள் 900-1000 செல்சியஸ் டிகிரி வெப்பத்தில் சுடப்பட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது. வெறும் மரம் அல்லது கரி கொண்டு அவ்வளவு அதிக வெப்பத்தை உண்டாக்கியிருப்பதை நினைக்கும்போது அந்தக் காலத்திலேயே நிகழ்ந்த அறிவியல் முன்னேற்றங்களை எண்ணி வியப்புறமுடிகிறது. ஆனாலும் என்ன செய்வது மனிதகுலம் ஒவ்வொரு போரின்போதும் வரலாற்றை அழித்து முதல் பக்கத்திலிருந்தல்லவா எழுத ஆரம்பிக்கிறது.
(தொடரும்)
|