|
தூக்கம் வரவில்லை. எப்படி வரும்? ஆனால் ட்யூப் லைட் வெளிச்சமும் 200 வாட் பல்பின் வெளிச்சமும் தூக்கம் வராததற்குக் காரணமல்ல என்று நிச்சயமாக அவனுக்குத் தெரியும். முற்றிலும் புதிய ஒரு அனுபவத்திற்கு தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்தான். முதன் முறையாக பிரசவிக்கப்போவதைப் போல. நார்மல் டெலிவரியாக இருக்கத்தான் ஆசை. ஆனால் சிசேரியனாக இருக்கலாம். குழந்தை செத்துப் பிறக்கலாம். அல்லது...அதற்கு மேல் கற்பனை ஓடவில்லை.
அடிக்கொருதரம் எழுந்து பார்த்துக்கொண்டான். அவனும் நிலவும்தான் விழித்துக்கொண்டிருந்தார்கள். பி - ஒன், பி - ட்டு, பி - த்ரி எல்லாம் ஸ்லீப் - ஒன், ஸ்லீப் - ட்டூ, ஸ்லீப் - த்ரீ ஆகிவிட்டிருந்தது. அதிலும் லேட்டாக வந்தவர் லேசாக குறட்டைவிட ஆரம்பித்தார். அதை குறட்டை என்றுகூட சொல்ல முடியாது. லேசான முரட்டு தொனியில் ஆரம்பித்து புஸ் என்று வாய்வழி புஸ்வானமாக முடிந்துகொண்டிருந்தது அது. தனது முயற்சியில் சற்றும் தளராதவராக அவர் திரும்பத் திரும்ப அந்த ஒலியை ஒரு பரிபூரண குறட்டையாக்க முயற்சி செய்துகொண்டே இருந்தார்.
ரவி முழித்துக்கொண்டான்.
"ச்சே, தூக்கமே வரலெ சார். இவர் எப்டிசார் இவ்வளவு கொறட்டை விட்டு தூங்குறாரு? எங்க வீட்லெலாம் நா தூங்கப்போகும்போது ஒரு லேசான சத்தம்கூட இருக்கக்கூடாது". அவன் தன் நடுராத்திரி பீற்றலை ஆரம்பித்தான்.
ஷாஹுல் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
"கொசு கடி வேறெ. சார், டார்டாய்ஸ் வச்சிருந்திங்கல்ல, எங்கெ சார்? அதெக்கொளுத்தலாம்"
"உள்ளெருக்கு"
எழுந்து சென்று தேடி எடுத்து கொளுத்திக் கொண்டுவந்து ஷாஹுலுக்குப் பக்கத்தில் வைத்தான். அதன் நெடி மூக்கை அடைத்தது.
"ரவி, அந்தப்பக்கமா வைங்க"
"சரி சார்." அவன் தலைமாட்டுப் பக்கமாக வைத்துகொண்டான். கொஞ்ச நேரத்தில் எழுந்துகொண்டான்.
"சார், என்ன சார், மூச்சே விட முடியலெ?" என்றான்.
இப்படித்தானேடா எனக்கும் இருந்திருக்கும் என்று நினைத்துகொண்டே, "கால்பக்கம் வைங்க" என்றான் ஷாஹுல்.
கால்மாட்டுப் பக்கம் வைத்தான் ரவி. பின் படுத்தவன் கொஞ்ச நேரத்தில் உறங்கியும் போனான்.
எல்லாருக்கும் சாத்தியமாகும் உறக்கம் ஏன் தனக்கு மட்டும் இல்லாமல் போகிறது? ஏன் எல்லார் மாதிரியும் தான் இல்லை? ஒருவேளை அதிகமாக பயப்படுவதுதான் காரணமாக இருக்குமோ? படிச்ச முட்டாள்கள் இப்படித்தான் இருப்பார்களோ? இது தூக்கமின்மை பற்றிய கவலையா அல்லது பயம் பற்றிய அலசலா என்று அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
சரி ஏன் தேவையில்லாமல் இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து கொள்ள வேண்டும்? பேசாமல் படுப்போம் என்று படுத்தான். ஆனாலும் அவன் மனம் பேசிக்கொண்டேதான் இருந்தது. இரவின் அமைதியையும் கிராமத்து அழகையும் ரசிக்கவும் முடியவில்லை. தூங்கவும் முடியவில்லை. விழித்திருக்கவும் முடியவில்லை.
எழுந்து உட்கார்ந்து கொண்டான். மணி பார்த்தான். இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. லேட்டாகப் படுத்து வீட்டில் செய்வதுபோல் விடிகாலையில் தூங்கிவிட்டால்? அந்த நினைப்பு வந்ததும் மறுபடி படுத்துக்கொண்டான். தூங்க வேண்டுமென்றால் உடம்பை படுக்கை வாட்டில் போட்டுத்தான் ஆகவேண்டுமா என்று தனக்குள் கேட்டுக்கொண்டவனாய் கிடந்தான். என்னென்னவோ நினைவுகள். மனைவி, குழந்தைகள், மற்றும் காதல் காலத்து நினைவுகள் என மாறிமாறி வந்துகொண்டிருந்தன.
அப்படியே தூங்கிப் போனானா என்று தெரியவில்லை. மறுமுறை எழுந்து அவன் மணி பார்த்தபோது விடிகாலை நான்கு. அதற்குமேல் படுத்திருக்க வேண்டாம் என்று எழுந்து கொண்டான். ஒரு முடிவுக்கு வந்தவனாய், தேவைப்பட்டதையெல்லாம் எடுத்துக்கொண்டு குடிநீர்த்தொட்டிக்குப் போய் குழாயைத் திறந்து பல் துலக்கினான். பின் பேஸ்ட் ப்ரஷ்ஷை மறுபடி பையில் வைத்துவிட்டு, வாளி, 'மக்' சகிதம் டாய்லட்டுக்குள் சென்றான்.
அந்த இருட்டு அவனுக்குப் பிடித்திருந்தது. தன்னை யாரும் பார்க்கவில்லை என்பது அவனுக்கு உகந்ததாய் இருந்தது. உள்ளே போனவன் டார்ச்சை ஏற்றி தலைகீழாக நிற்க வைத்தான். தண்ணீரை எடுத்து லேசாக கை, நெஞ்சு என்று தடவிக்கொண்டான். குளிர் பழகியதும் எடுத்து மேலுக்கும் தலைக்கும் ஊற்றிக்கொண்டான். காக்காய்க் குளியல்தான் என்றாலும் அது ஒரு ஃப்ரெஷ்னஸைக் கொடுத்தது.
வந்து பவுடர் அடித்து, எண்ணெய் பூசி, தலைவாரி, பனியன் போட்டு, ஷர்ட்டை இன்பண்ணி, பேண்ட் ஷுவெல்லாம் போட்டவுடன் உண்மையிலேயே ஒரு அதிகாரி போலவே இருந்தான். மணி பார்த்தபோது நாலறைதான் ஆகியிருந்தது. வாழ்க்கையிலேயே முதல் முறையாக அதிகாலை நாலு மணிக்கு எழுந்து, குளித்து நாலறை மணிக்கே தயாரானது அன்றுதான். ஆனால் அது நன்றாக இருந்தது. தினமும் அப்படிச் செய்யவேண்டும் என்று தோன்றியது.
ஐந்து மணி வாக்கில் ரவி விழித்துக்கொண்டான். முதலில் ஷாஹுலைத்தான் பார்த்தான்.
"என்ன சார், ரெடியாயிட்டிங்களா?" என்றான் ஆச்சரியத்தோடு.
"அஞ்சு மணியாகுது ரவி. இன்னமும் லேட் பண்ணக்கூடாது. போஸ்டரெல்லாம் ஒட்டணும். எழுந்திருங்க" என்றான்.
"தோ சார்", என்று எழுந்தவன் காலைக்கடன்களை முடிக்கச் சென்றான். பேஸ்ட் சகிதமாக திரும்பி வந்தவன், "சார் இது ஸ்பெஷல் பேஸ்ட் சார், ஷுகர் இருக்குதுல்ல? அதுக்காக இது ஸ்பெஷல் பேஸ்ட் சார்" என்று அநதைக் காட்டினான். நோய் வருவதில்கூட ஒரு மனிதனுக்குப் பெருமை இருக்க முடியுமா?!
குளித்துவிட்டு ரெடியாக வந்தவன் வாக்குப்பதிவுக்கான வேலைகளைப் பார்ப்பான் என்று நினைத்த ஷாஹுலுக்கு அவன் வெளியே கிளம்பியது ஆச்சரியமாகவும் ஏரிச்சலாகவும் இருந்தது.
"எங்கே போறீங்க ரவி?"
"வாக்கிங், சார். ஒரு மைலாவது டெய்லி நடக்கணும் சார் நான்" என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் சென்றுகொண்டே இருந்தான்.
அவனை நம்பி பிரயோஜனமில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, போஸ் வந்தான். அதற்குள் சந்திரனும் மூன்றாவது ஆளும் விழித்திருந்தனர். அவர்களிடம் போஸ்டர்கள் ஒட்டுவது பற்றி சொன்னான். உடனே அவர்கள் உதவ முன் வந்தனர். காலைக்கடன்களை முடித்ததும் போஸும் சந்திரனும் போஸ்டர்களையெல்லாம் ஒட்டினர்.
ஒட்டி முடிக்கவும் ரவி வரவும் சரியாக இருந்தது.
பின் எல்லாருமாய்ச் சேர்ந்து பூத் ரெடி பண்ணினர். அதில் சந்திரனுக்கு நல்ல அனுபவம் இருந்ததை அவர் வேலை காட்டியது. அட, இவ்வளவு சிம்பிளா இந்த வேலை என்று ஷாஹுல் வியந்தான்.
ஆறரை மணி வாக்கில் ஒரு பத்து போலிங் ஏஜெண்ட்டுகள் வந்தனர். தலைவரும் வந்திருந்தார். ஆளும் கட்சி வேட்பாளரின் ஏஜண்ட் அவர்தான். எல்லாரிடமும் மாதிரி வாக்குப் பதிவை நடத்திக் காட்டி சீல் வைத்து கையெழுத்தும் வாங்கிக் கொண்டான் ஷாஹுல். ஏற்கனவே பல தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு யந்திரத்தை பயன்படுத்திய மாதிரி அவன் ரொம்ப லாவகமாக அதைக் கையாண்டது அவர்களுக்கு மட்டுமல்ல, அவனுக்கேகூட ஆச்சரியமாகத்தான் இருந்தது. புத்தகத்தில் படித்துவிட்டும் குளத்தில் நீந்த முடியும் போலுள்ளதே!
சரியாக ஏழு மணிக்கு முதல் வாக்குப் பதிவு நடந்தது. வந்தவர் எந்த பிரச்சனையும் தராமல் ஓட்டுப்போட்டுவிட்டு சென்றார். மெல்ல அமைதியாக நடந்தது வாக்குப்பதிவு. முதல் இரண்டு மணி நேரத்தில் நூறுபேர் ஓட்டுப் போட்டிருந்தார்கள். ஒன்றும் பிரச்சனையில்லை போலுள்ளதே என்று ஷாஹுலுக்கு சந்தோஷமாக இருந்தது.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்தில் பதிவான மொத்த வாக்குகளையும் குறித்துகொண்டே வந்தான். முதலில் ரவி சோம்பேறித்தனமும் ஷுகர்த்தனமும் காட்டினாலும் வாக்காளர்களின் அடையாளங்களைச் சரிபார்ப்பது போன்ற வேலைகளை சரியாகவே செய்தான். அவன்தான் சொதப்பிவிடுவான் என்று ஷாஹுல் முதலில் நினைத்தான்.
பகல் நேரத்தில் ஒரு அம்மா வந்தாள். கையில் அடையாளமெல்லாம் வைத்துவிட்டு ஓட்டுப் போடச் சொன்னதும், "சீட்டு எங்கெ?" என்று கேட்டாள்.
"சீட்டெல்லாம் கெடயாதும்மா, உள்ளே போ. அந்த மெஷின்ல நீ எந்த கச்சிக்கி ஓட்டுப் போடணுமோ அதுக்கு நேரா இருக்குற பட்டனெ அமுக்கு" என்று மோகன் -- பி-த்ரியின் பெயர் -- விளக்கினார்.
சரி சரி என தலையாட்டி உள்ளே சென்ற அந்த அம்மா ரொம்ப நேரமாக எதையோ அழுத்திக்கொண்டிருந்தாள். கடைசியில் ஷாஹுல் உள்ளே போக வேண்டியதாயிற்று.
சின்னத்தை ஒட்டியிருந்த சிவப்பு விளக்கை அவள் அழுத்திக்கொண்டிருந்தாள்.
"இதல்லம்மா, இங்கெ இருக்கு பாருங்க, இதெ அழுத்தணும்" என்று ஷாஹுல் விளக்கினான். பிறகு அழுத்தினாள்.
அடுத்தடுத்து வந்த எல்லாப் பெண்களுமே இண்டிகேட்டரை அழுத்திக்கொண்டிருந்ததால் ஒவ்வொருவருக்குமே ஷாஹுல் போக வேண்டியதாயிற்று.
ஒரு அம்மா உள்ளே போய் சும்மாவே இருந்தாள்.
"என்னம்மா, ஓட்டு போடுங்க."
யோசித்தாள்.
"எந்த கச்சிக்கி போடணும்?" உள்ளே அவளுக்கு உதவச் சென்ற ஷாஹுல் கேட்டான்.
இரண்டு விரலைக் காட்டினாள்.
இரட்டை இலை சின்னம் இருந்த இடத்தை ஷாஹுல் காட்டினாள். சரி என்று கேட்டுக்கொண்ட அவள் யானை சின்ன பட்டனை அழுத்தினாள்.
இன்னொரு கிழவி வந்தாள். அவளுக்கும் அதே பிரச்சனைதான்.
"எதுக்கும்மா ஓட்டு போடனும்?"
"எதுக்காச்சும் போடு"
"நாம் போடறதில்லம்மா. நீங்கதாம் போடணும். எதுக்கு போடப்போறீங்க?"
"தெரியலையே" கையை விரித்தாள்.
"தெரியலேன்னா எப்படிம்மா, எதுக்காச்சும் போடு"
"இது என்ன?" மேலே காட்டினாள்
"அது பம்பரம்."
"அதுக்கே போடு" என்றாள்.
வேறுவழியின்றி அவளுக்காக பம்பரத்தில் அழுத்திவிட்டு வந்தான் ஷாஹுல்.
கிட்டத்தட்ட இரு நூறு பேருக்கு மேல் ஓட்டுப்போடும் இடத்துக்கு உள்ளே போய் ஷாஹுல் விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது.
"பேரென்னம்மா?"
"சின்னக் கொலந்தெ"
"எலக்ஷன் அட்டெ இருக்கா?"
"அப்டீன்னா?"
"ஃபோட்டோ பிடிச்சாங்கல்ல? அந்த ஃபோட்டோ "
"புடிக்கலியே"
"அப்ப ரேஷன் கார்டு இருக்கா?"
"அப்டீன்னா"
"சக்கரெ அட்டெமா"
"இருக்கு"
"அதெக்காட்டு"
"வூட்ல ருக்கு"
"என்ன சார் ஒன்னுமே இல்லாம எப்டி சார் அனுமதிக்கிறது?"
ரவி ஷாஹுலைப் பார்த்தான்
அதற்குள் போலிங் ஏஜெண்டுகள், அவளைத் தெரியும் என்றும் அனுமதிக்கலாம் என்றும் சொன்னார்கள்.
"சரி போம்மா"
ரேஷன் கார்டு காட்டி ஓட்டுப்போட்டு விட்டு வந்த ஒரு பொம்பளை கேட்டாள்.
"என் சக்கரை எங்கெ?"
"சக்கரையா?இங்கே என்ன சக்கரெ அரிசியெல்லாமா போடுறாங்க?"
"என் சக்கரெ அட்டெ எங்கெ?"
"ஓ கார்டா? இந்தா"
ஒரு அம்மா ஓட்டுப் போட்டுவிட்டு போனபோது ஒரு ஏஜண்ட் கேட்டார்.
"ரெட்டெ எலைக்கிப் போட்டியா?"
"ஆமா" என்று அவள் தலையாட்டினாள்.
"பத்து ரூவா குடுத்தாங்களா?" என்றார்.
"ஆமா" என்று சிரித்துக்கொண்டே அவள் சென்றாள்.
ஒரு கிழவர் வந்தார். அசிங்கமசிங்கமாக யாரையோ திட்டிக்கொண்டே. அவரால் நிற்க முடியவில்லை. ஷாஹுல் எழுந்து சென்று அவரைப் பிடித்து உதவினான். அவர் மீது சொல்லமுடியாத அளவு நாற்றமடித்தது. உடம்பு சேறாட்டம் இருந்தது. ஒரு வினாடி தொட்டதுதான். கைபூரா ஈரமாகிவிட்டது. ஒரு விதமான பிசுபிசுப்புடன். அவரை அவன்தான் உள்ளே அழைத்துச் சென்று அவர் சொன்னபடி பம்பரம் சின்னத்தில் ஓட்டும் போட்டு வெளியே அழைத்து வந்து விட்டான். அவர் போனபிறகு கையைக் கழுவிக் கொண்டான்.
ஒரு மணியளவில் சாப்பாடு வந்தது. கொஞ்ச நேரம் வாக்குப் பதிவை நிறுத்தி விடலாம். நீங்க எல்லாரும் ஒன்னா சாப்பிடுங்க. பொறவு வச்சுக்கலாம் என்று தலைவர் சொன்னதும்தான் தாமதம் ரவி உடனே எழுந்துவிட்டான்.
கதவுகளை மூடிவிட்டு எல்லாரும் அமர்ந்து சாப்பிட்டோ ம்.
ஒன்றரை மணி வாக்கில் மறுபடி வாக்குப்பதிவு ஆரம்பித்தது.
முக்கால் வாசிப்பேர் தேர்தல் கமிஷன் குறிப்பிட்டிருந்த 14 வகையான டாகுமெண்ட்டுகளில் எதையுமே எடுத்து வராதவர்களாகவே இருந்தார்கள். ஏஜெண்ட்டுகள் சொன்னதன் பேரில்தான் அவர்களெல்லாம் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டார்கள். அது சரியா தவறா என்று ஷாஹுலுக்கு விளங்கவில்லை. அவன் வெறும் சாட்சியாக இருந்து நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒருவன் பெயர் வாக்காளர் பதிவுப் பட்டியலில் இருந்து அடிக்கப்பட்டிருந்தது. அவனை ஓட்டுப்போட அனுமதிக்கலாம் என்று தலைவரும் இன்னும் பலரும் வந்து ஷாஹுலைக் கேட்டுக்கொண்டனர். திரும்பி உயிருடன் வீட்டுக்குப் போவோமா என்ற பயமிருந்தாலும், காமராஜர் பாணியில் பார்க்கலாம் என்றான் ஷாஹுல். கடைசியில் அவனை ஓட்டுப்போட அனுமதிக்கவில்லை. ஆனால் பிரச்சனை ஏதும் வரவில்லை.
சரியாக ஐந்து மணிக்கெல்லாம் ஓட்டுப்பதிவு ஏஜண்ட்டுகள் முன்னிலையில் க்ளோஸ் பண்ணப் பட்டது. மொத்தம் 517 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் பெண்கள்தான் அதிகம் போட்டிருந்தனர்.
ஐந்தரை மணிக்கெல்லாம் எல்லாம் முடிந்துவிட்டது. நிரப்ப வேண்டிய படிவங்களையெல்லாம் நிரப்பினான். சீல் வைக்க வேண்டியவற்றையெல்லாம் வைத்தான். எல்லாம் ரெடி. காத்திருந்தார்கள். காத்திருந்தார்கள். யாரும் வரவில்லை. எப்போது வருவார்கள் என்ற தகவலும் இல்லை. பயங்கரமாக சலிப்பேற்பட்டது.
எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் ஊருக்குக் கிளம்ப முடியாது.
மறுபடி பாரதிபாலனை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்தான். படிப்பதில் மனம் ஓடவில்லை. புத்தகத்தை மூடினான். ஓட்டுப்போட வந்த பெண்களைப் பற்றியே நினைப்பு வந்துகொண்டிருந்தது.
இரண்டு பென்ச்சுகளை சேர்த்துப் போட்டு அதில் படுத்துக்கொண்டான். சுகமான காற்று வீசியது. ஆனால் எதையுமே ரசிக்கும் மனநிலை இல்லை. பிரச்சனை ஏதும் ஏற்படாவிட்டாலும் மக்கள் ஓட்டுப்போட்ட விதம் அவனை என்னவோ செய்தது.
கடைசியில் இரவு 12க்கு மேல் வந்தார்கள். அந்த வழுக்கை மண்டையும் இன்னொருவரும், ஒரு போலிஸும். எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு காசையும் வாங்கிப் பங்கிட்டுக் கொடுத்தான். அதற்குமேல் ஊருக்கு பஸ்ஸும் கிடையாது. காலையில்தான்.
மறுபடி எல்லாரும் படுத்தார்கள்.
விழித்தபோது அதிகாலை ஐந்து மணி.
ஜோதிகாபுரத்துக்கு முதல் பஸ் ஆறு மணிக்கு என்றார்கள். ஷாஹுலும் ரவியும் ரெடியானார்கள். பள்ளிக்குப் பக்கத்தில்தான் இருந்தது பஸ்-ஸ்டாப் என்றாலும் லேசாக தூறிக்கொண்டிருந்தது.
ரவிக்கு சளி பிடிக்க ஆரம்பித்திருந்தது.
"சார், இந்த பானெ தண்ணி ஒத்துக்கலெ சார்" என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
"என்ன ரவி, வாக்கிங் போகலையா?" என்றான் ஷாஹுல்.
சந்திரனும் மோகனும் சிரித்தார்கள். ரவி ஒன்றும் சொல்லவில்லை.
பஸ்ஸுக்காக நின்றுகொண்டிருந்தபோது அந்த அம்மா வந்தாள். ஒரு குடத்தைத் தூக்கிக் கொண்டு. தண்ணீர் பிடிக்க எங்கோ.
"சார், இந்தம்மாதானெ சார் பத்து ரூபா வாங்கிகிட்டு ரெட்டெ எலக்கி ஓட்டுப்போட்டேன்னு சொன்னது?" என்றான் ரவி.
அப்படித்தான் தோன்றியது.
வந்தவள் ஷாஹுலைப் பார்த்ததும் நின்றாள்.
"என்னா சார், ஊருக்குக் கெளம்பிட்டியா?
"ஆமாம்மா"
"எங்கெ தண்ணி புடிக்கவாம்மா?"
ஆமா என்பது போல தலையாட்டினாள்.
"என்னம்மா, நேத்து பத்து ரூவா லாவமா ஒனக்கு ?" என்றான் ரவி வேண்டுமென்றே.
"இன்னமோ போ, ஒரு பொம்மக்கி போடறதுக்கு பத்துரூவா குடுத்தாங்க. எல்லாரும் ஆளுக்கு பத்து பத்து ரூவா குடுத்திருந்தா எனக்கும் காசு கெடச்சிருக்கும், நானும் எல்லா பொம்மைக்கிம் போட்டிருப்பன்ல?" என்றாள்.
ஷாஹுல் புன்னகைத்தான். அதற்குள் பஸ் வந்துவிட்டது.
ஏறி உட்கார்ந்தபோது தூரலோடு கலந்த அதிகாலைக் காற்று சில்லென்று அடித்தது. எல்லாம் முடிந்துவிட்டது. பயந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனாலும் இந்தியாவின் ஆன்மாவுக்குள் ஷாஹுல் மேற்கொண்ட இரண்டு நாள் பயணம் அவனை என்னவோ செய்திருந்தது.
வண்ணத்துப் பூச்சிகள் சாகவில்லை. வண்ணத்துப் பூச்சிகளை யாரும் கொல்லவுமில்லை. ஆனாலும், இரும்பால் செய்த மாதிரி கனமாக ஆகிவிட்டிருந்தது வண்ணத்துப் பூச்சி.
** முற்றும் **
|